யாழ்ப்பாணம் நல்லூர் துப்பாக்கிப் பிரயோகத்துடன் சம்மந்தபட்டவர் என்ற பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை சிறைச்சாலையின் தனியறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறுகிறது.
கடந்த சனிக்கிழமை நல்லூரில் நீதிபதி இளஞ்செளியனை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட சம்பவத்தில் நீதிபதியின் மெய்க்காப்பாளர் உயிரிழந்தமை அறிந்ததே. இந்த நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபர் சில தினங்களுக்கு முன்னர் தாமாகவே வந்து சரணடைந்திருந்தார்.
ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளின் பின்னர் நீதவான் முன்னியையில் முற்படுத்தப்பட்டபோது இவரை ஆகஸ்ட் மாதம் எட்டாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதற்கமைவாக மேற்படி சந்தேக நபர் சிறைச்சாலையின் தனியறையில் அடைக்கப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதுவரை உறவினர்கள் யாரும் சந்தித்திராத நிலையில் இவரது இரண்டாவது மனைவி மட்டும் சந்தித்துள்ளதாக அறியமுடிகிறது.
இதே வேளை குறிப்பிட்ட சந்தேக நபர் எவ்வித ஐயப்பாடுகளுக்கும் இடமின்றி தன்னையே குறிவைத்ததாக நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் மீண்டும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.